பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி, ரவிச்சந்திரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆகவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு, ஆளுநர் – குடியரசுத்தலைவரின் முடிவுக்காக அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, குடியரசுத்தலைவரின் முடிவுக்காக தற்போது காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என தெரிவித்த நீதிபதிகள், முடிவுகள் எடுக்கப்படும் நிலையில், மனுதாரர் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி. வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.







