இந்து வாழ்வியல் முறை, பஞ்சபூத ஆராதனை போன்றவற்றை தான் ராஜராஜ சோழன் பின்பற்றினார். அதனால் அவர் இந்து தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் உரையாற்றியுள்ளார். அதில், உலகில் உள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம். இந்து என்பது மதமல்ல. வாழ்வியல் முறை. பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறைக்கு, ஆங்கிலேயர்கள் தான் இந்து மதம் என்று பெயர் வைத்தனர். ராஜராஜசோழன் இந்துவா என்று சிலர் இன்று பேசுகின்றனர். இந்து வாழ்வியல் முறை, பஞ்சபூத ஆராதனை போன்றவற்றை தான் ராஜராஜசோழன் பின்பற்றினார். அதனால் அவர் இந்து தான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜராஜசோழன் இந்துவா என்ற சர்ச்சைப்பேச்சு தான், இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்து வாழ்வியல் முறையை எடுத்துச்செல்ல உதவுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் இந்து வாழ்வியலை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிகிறது. ராஜராஜசோழன் இந்துவா என்பது தேவையில்லாத சர்ச்சை. இதனால் யாருக்கும் பயனில்லை.
13-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை இலங்கை அமல்படுத்த தவறிவிட்டது. இலங்கையின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு திருப்தியளிக்கவில்லை. இலங்கையின் அமைப்பில் இந்தியா எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ள விரும்பவில்லை. உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு தான் சிறந்தது என்று ஐ.நா.சபையில் பல நாடுகள் தெரிவித்துள்ளன.
அதேபோல், இலங்கைக்கு எதிராகவும் இந்தியா வாக்களிக்கவில்லை. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தால், அங்கு தமிழர்களின் உரிமைகள் பற்றி இந்தியாவால் பேச முடியாது. இந்தியா இலங்கைக்கு 60,000 வீடுகளை கட்டித் தந்துள்ளது. யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே ரயில் சேவை, கலாச்சார மையங்கள் போன்றவற்றை இந்தியா செய்து தந்துள்ளது.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு, பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வுகாண முடியும். அதைத் தான் இந்தியா செய்து கொண்டுள்ளது. இலங்கையும் நன்றாக இருக்க வேண்டும் ; இந்தியாவும் நன்றாக இருக்க வேண்டும். அதுவே மத்திய அரசின் நிலைப்பாடு. இலங்கையை சீனா போன்ற நாடுகள் ஆதிக்க களமாக பயன்படுத்துவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.
தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் தமிழ்நாட்டு அரசிலும், இந்திய அரசிலும் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. அதனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும்.
தமிழ்நாட்டு அமைச்சர்கள் யாரும் அவர்களின் பணியை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அமைச்சர்களின் உள்ளத்தில் இருப்பதே, வார்த்தைகளாக வெளியில் வருகிறது. ஓசியில் தானே போகிறீர்கள் என்று கேட்பது அமைச்சரின் உள்ளத்தில் இருந்து வந்தது தான். திமுகவினர் என்ன பேசினாலும் அது எப்படி சர்ச்சையாகிறது என்று திமுகவினரே என்னிடம் கேட்டனர். திமுகவினர் பேசுவதெல்லாம் அனைவராலும் கவனிக்கப்படுவதால் தான் அது சர்ச்சையாகிறது.
சமூகவலைதளங்களை அனைவரும் பயன்படுத்துவதால், இந்த ஆட்சியில் திமுகவினரின் உண்மைத்தன்மை எளிதில் அம்பலப்பட்டுவிடுகிறது. சமூகநீதி என்று பேருக்கு தான் திமுகவினர் ஆட்சி நடத்துகின்றனர். திமுகவினரே சமூகநீதியை கடைபிடிப்பதில்லை. திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர். ஸ்டாலின் வீட்டில் சூப்பர் சி.எம். இருக்கின்றனர். அவர்கள் தான் அரசை இயக்கி வருகின்றனர். ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்பது மட்டும் தான் அமைச்சர்களின் வேலை. திரைமறைவில் இருந்து சூப்பர் சி.எம்.களாக செயல்படுபவர்கள் தான் நன்றாக சம்பாதிக்கின்றனர்.
RSS இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பாக பணியாற்றுவேன். RSS இயக்கம், 1925-ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முக்கியமான 3 பகுதிகளான காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனைகளில் RSS தீவிரமாக சேவையாற்றியது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்திருப்பதற்கு காரணம் RSS தான். இந்தியாவில் RSS செய்த சாதனையில் 10% கூட வேறு கட்சிகள் செய்ததில்லை. தனது சாதனைகளை, சேவைகளை என்றுமே RSS விளம்பரப்படுத்தியதில்லை. சேவை செய்வது மட்டுமே என் பணி என்று இருப்பது RSS தான். RSS பற்றி அறியாதவர்கள் தான் பொய்களை பரப்பி வருகின்றனர்.
இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் வலிமையாக உள்ள இயக்கம் தான் RSS. இந்தியாவின் கலாச்சாரத்தை உலகமெங்கும் கொண்டுசெல்லவே RSS உலக நாடுகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மோடியின் ஆட்சியில் தான் யோகா, ஆயுர்வேதா போன்றவை உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அமெரிக்காவில் திருவாசகம் படிப்பதை நானே நேரில் கண்டேன். RSS-ஐ அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.