சென்னை பெருநகர மாநகராட்சி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் போது நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கும். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதோடு, பல்வேறு தொற்று நோய்களாலும் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழை என்பது சராசரியாக அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும் . இக்காலகட்டங்களில் சென்னையில் மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது .
அக்குழுவின் ஆலோசனையின் பெயரில் சென்னையில் ராயபுரம் , தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் , வேப்பேரி, புளியந்தோப்பு, மயிலாப்பூர், அசோக் நகர், கே.கே. நகர் போன்ற இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மழைநீர் தேங்கும் இடங்களில் வடிகால் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் வடகிழக்கு வருவ மழை ஆரம்பித்து முடிந்துவிடும் போல் உள்ளது.
மேலும் இதனால் ஏற்கனவே இருந்த பாதிப்பை விட மிக அதிகமான பாதிப்பாக தான் இருக்கும் . கே.கே.நகர், அசோக் நகர், நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் பல இடங்களில் துண்டு, துண்டாக பணி நிற்கிறது. இதனால் அங்கு குடியிருப்போரும், சாலையில் பயணிப்போறும் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
ஆகவே, சென்னை பெருநகர மாநகராட்சி விரைவில் பணிகளை இடைநிற்றல் இல்லாம் தொடர்ந்து விரைவாகவும், முழுமையாகவும் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.