இந்தியில் ரயில்வே வகுப்புகள்; எம்.பியின் கோரிக்கையை ஏற்று ஆங்கிலத்திலும் நடத்த அனுமதி

ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பின் இணையவழி பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திலும் நடைபெறும் என்கிற அறிவிப்புக்கு மதுரை எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சி வகுப்புகள்…

ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பின் இணையவழி பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திலும் நடைபெறும் என்கிற அறிவிப்புக்கு மதுரை எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.

ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சி வகுப்புகள் இந்தியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு கடந்த இருபத்தி ஒன்றாம் தேதியில் இருந்து நடைபெற்று வந்தது. இந்தி பேசாத மாநிலங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வகுப்புகள் ஆங்கிலத்திலும் நடத்தக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்திருந்தார்.

இந்நிலையில், இந்த பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திலும் நடைபெறும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள் இந்தியில் மட்டும் நடத்த அறிவிக்கப்பட்டு கடந்த இருபத்தி ஒன்றாம் தேதியில் இருந்து நடைபெற்று வந்தது.

இதை விமர்சித்து இந்தி பேசாத மாநில ஊழியர்கள் வசதிக்காக அவரவர் தாய்மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இணையவழி பயிற்சி தனியாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். அதுவரை ஹிந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இப்பயிற்சிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்தேன்.

எனது கோரிக்கையை ஏற்று இப்போது 25 ஆம் தேதியில் இருந்து ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்க ரயில்வே நிர்வாகம் அட்டவனை வெளியிட்டுள்ளது .அதன் நகல் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. 21ஆம் தேதி இந்தியில் நடந்த பாடத்தை 25ஆம் தேதி ஆங்கிலத்தில் நடத்திட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நவம்பர் இரண்டாம் தேதி வரை பயிற்சி அளிக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலையில் இந்தி பேசுபவர்களுக்கு இந்தியிலும் மாலையில் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும் வகுப்பு நடைபெறும். இது இந்தி பேசாத மாநில ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இந்தப் பிரச்சினையை என் கவனத்திற்கு கொண்டு வந்த ரயில்வே மருத்துவ ஊழியர்களையும், டி ஆர் இ யூ (DREU) தொழிற்சங்கத் தோழர்களையும் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் பயிற்சிகளை அவரவர் தாய் மொழியிலும் நடத்த வேண்டும் என்கிற என் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.