தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
67வது தேசிய திரைப்பட விருதுகள், 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு இன்று வழங்கப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார். இந்த விழாவில், நடிகர் ரஜினி காந்துக்கு, தாதா சாஹேப் பால்கே விருதை அவர் வழங்கினார். 45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை பெற்ற பின் பேசிய நடிகர் ரஜினிகாந்த், விருதை தன் குருநாதர் கே.பாலசந்தருக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னார். இந்நிலையில் விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1452522761545420801
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதொரு பொன்னாளாகும். இந்தியத் திரையுலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களில் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் நீங்கள். நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடுடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.








