மக்களவைத் தேர்தலுக்காக INDIA கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏப்.12 ஆம் தேதி தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்கிறார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 04-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு வருகிறார்.
ஏப்ரல் 12-ம் தேதி முதல் பரப்புரையை தொடங்குகிறார். ஏப்.12 ஆம் தேதி நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து மாலை கோவையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.