காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று 2-வது நாள் நடைபயணத்தை நிறைவு செய்தபோது, அங்கிருந்த சமூக அங்கத்தினர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி நேற்று நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயண தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரி கடற்கரையில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல் சிறிது தூரம் நடந்து சென்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக அவர் நடைபயணத்தை தொடர்ந்தார். அவருடன் பல்வேறு மாநிலங்களிலிருந்து 118 பேர் பயணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து 100 பேர் ராகுல் காந்தியுடன் இந்த நடைப்பயணத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல் சுங்கான்கடை சந்திப்பு வரையும், காலை 6.30 மணிக்கு சுங்கான்கடை சந்திப்பு முதல் வில்லுக்குறி சந்திப்பு வரையும், காலை 7 மணிக்கு வில்லுக்குறி சந்திப்பு முதல் புலியூர்குறிச்சி சர்ச் வரையும். மாலை 3 மணிக்கு புலியூர்குறிச்சி சர்ச் முதல் மேட்டுக்கடை மசூதி சந்திப்பு வரையும், மாலை 4 மணிக்கு தக்கலை மேட்டுக்கடை சந்திப்பு முதல் முளகுமூடு சந்திப்பு வரையும் நடைபயணத்தை மேற்கொண்டார்.
இன்று 2-வது நாள் நடைபயணத்தின் முடிவில், முளகுமூடு சந்திப்பில் உள்ள சமூக அங்கத்தினர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். சாதாரண மக்கள் போன்று வீட்டு திண்னையில் அமர்ந்து அவர்களுடன் பேசினார். மேலும் அரசியல் நிலவரம் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் நிலைமை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்









