திமுக கூட்டணியிலிருந்து விலகலா? கே.எஸ்.அழகிரி பதில்

திமுக கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கே.எஸ்.அழகிரி. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் 31ஆம் ஆண்டு நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில…

திமுக கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் 31ஆம் ஆண்டு நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கேரள மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “ராஜீவ்காந்தி தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரர். இந்தியர்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்யத் தயாராக இருந்தவர். ராஜீவ்காந்தி இறந்தபோது கண்ணீர் ஆறாக போனது. தற்போது கொலையாளிகளை விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவது பார்க்கும்போது இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வருகிறது. எங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.

குற்றம் செய்தவர்கள் தண்டனை வழங்க வேண்டும் என்ற அவர், குற்றவாளி என்பவர் குற்றவாளிதான், கடவுள் ஆக முடியாது என்றார். அவரிடம், பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுபவர்கள் திமுக மற்றும் அதிமுகவினர் தான். ஆகவே, திமுக கூட்டணியில் இருந்து விலகுவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “தேர்தல் வருவதற்கு முன்பே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்ய வேண்டும் என திமுக சொன்னது. தெரிந்துதான் கூட்டணியில் இருந்தோம். எனவே கூட்டணி வேறு, கொள்கை வேறு. அவர்கள் கொள்கையை அவர்கள் கூறுகிறார்கள். எங்கள் கொள்கையை நாங்கள் கூறுகிறோம். ஆகையால் இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று பதிலளித்தார் கே.எஸ்.அழகிரி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.