ஆமை வேகத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் – எடப்பாடி பழனிச்சாமி

திமுக ஆட்சியில் வறண்ட 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் மெத்தனமாகவும்,ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டுயுள்ளார். சேலம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி…

திமுக ஆட்சியில் வறண்ட 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் மெத்தனமாகவும்,ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டுயுள்ளார்.

சேலம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி தலைமையில்,மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் நிதியிலிருந்து
2022-2023 ஆம் நிதியாண்டில் 2 கோடியே 45 லட்சத்து  85 ஆயிரம் மதிப்பீட்டிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் 58 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளின் திறப்புவிழா நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது
அவர் கூறியதாவது, எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இரண்டு பணிகள் முடிவு பெற்றுள்ளது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் நிதியிலிருந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பகுதியில் முடிவுற்ற பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டபட்டு உள்ளது. இதற்கு 59 லட்சம் வழங்கிய மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகருக்கு மனமார்ந்த நன்றியை தொகுதி மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பேசினார்.

மேலும்  11அரை ஆண்டு கால அதிமுக ஆட்சியில்  மக்கள் வைத்த கோரிக்கைகள்
பெரும்பான்மையானவை நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதே போல்  எடப்பாடி சட்டமன்ற தொகுதி மக்கள் காவிரி தண்ணீர் வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள் அதனை  நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் அதிமுக ஆட்சிகாலத்தில்  வறண்ட 100 ஏரிகள் நீரேற்று திட்டத்தின் மூலமாக முதற்கட்டமாக ஆறு ஏரிகள் நிரப்பப்பட்டது.ஆனால் இப்பொழுது திமுக ஆட்சியில் மெத்தனமாக,ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.அந்த பணிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் நூறு ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றிருக்கும். இனியாவது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இத்திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

 

– பரசுராமன்.ப 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.