தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் வரும் 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது வெளியில் மக்கள் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் வரும் 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மக்கள் குடும்பத்துடன் அவரவர் வீடுகளில் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வழிபாட்டுத்தலங்களில் கொரோனா நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும் டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரும் 31-ஆம் தேதி காவல்துறையினரின் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்றும், மது அருந்தி வாகனத்தை ஓட்டுபவர் கைது செய்யப்படுவார்கள் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவசரத்தேவைகளுக்காக நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும் என்றும், ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ள அவர்,
பூட்டிய வீடுகளில் ரோந்து காவலர்கள் கண்காணிப்பு பணிக்கு செல்வதால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் அமைதிக்கு குந்தம் விளைவிப்பவர்கள், ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்த அவர், கண்ணியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறும், KAVALAN – SOS பயன்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.