“வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே”-அண்ணாமலை

நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றீர்கள் ஆனால் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே என பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார். விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அறிவித்தது.…

நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றீர்கள் ஆனால் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே என பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.

விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அறிவித்தது. அதன் படி, தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றியதும், பட்ஜெட் சட்டமன்ற தொடரின் போது நகைக்கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

அதில், 5 சவரனுக்கு உட்பட்ட நகையை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு சில தகுதியின் கீழ் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, தற்போது பொது நகை கடன்களை ஆய்வு செய்து தகவல் பதிவேற்றும் பணி நடைபெற்று வருவதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

https://twitter.com/annamalai_k/status/1476190778619617281

இதனால் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றீர்கள் ஆனால் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே என பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றீர்கள் ஆனால் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே! இன்று தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, 72 சதவீத நகைக் கடன்கள் தள்ளுபடிக்குத் தகுதியற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது எப்படி ஏற்கத்தக்கது?

தள்ளுபடி என்ற பெயரில், தேர்தல் பிரசாரத்தில் மக்களை நகைக்கடன் வாங்கும்படி உதயநிதி ஸ்டாலின் நிர்ப்பந்தித்தது ஏன்? போலியான வாக்குறுதியை நம்பி ஏமார்ந்து வட்டி கட்டி வரும் பெண்களும் அவர்களது குடும்பத்தாரும் படும் இன்னல்களுக்கு இந்த அரசு என்ன பதில் வைத்துள்ளது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.