நடிகர் விஷால், தன்மீது அளித்துள்ள புகார் குறித்து விளக்கமளித்துள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, தமது 40 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் இப்படி ஒரு புகாரை எதிர்கொண்டதில்லை என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் தயாரித்து நடித்த ’சக்ரா’ திரைப்படத்திற்காக மூன்று கோடி ரூபாயை ஆர்.பி. சவுத்ரியிடம் நடிகர் விஷால் கடனாகப் பெற்றுள்ளார். சில மாதங்களுக்கு முன் நடிகர் விஷால் கடனைத் திருப்பி செலுத்தியதாகவும், ஆனால் கடன் வாங்கிய போது விஷால் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை, ஆர்.பி. சவுத்ரி திருப்பி அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து தி. நகர் காவல் துணை ஆணையரிடம் நடிகர் விஷால் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஆர்பி சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில், தாமும், தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியமும், நடிகர் விஷாலுக்கு பைனான்ஸ் செய்ததாகவும், பின்னர், இரும்புத்திரை, சக்ரா ஆகிய இரண்டு படங்களுக்கான வரவு செலவு கணக்கு முடிந்துவிட்டதாக விஷாலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக, நடிகர் விஷால், கொடுத்திருந்த காசோலை உள்ளிட்ட ஆவணங்களை, தமக்கும் திருப்பூர் சுப்பிரமணியத்திற்கும் பொதுவான, இயக்குநர் சிவக்குமாரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும், எதிர்பாராமல் சிவக்குமார் மாரடைப்பால் இறந்துவிட்டதால், அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில்தான், அந்த பத்திரங்களை வைத்து தாம் மோசடி செய்ய முயற்சிப்பதாக விஷால் புகார் அளித்திருப்பதாகவும், இது தமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.