பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது என நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா – 2022 எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட நடிகர் பாக்யராஜ் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் பேசிய பாக்யராஜ், பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமரை வெளிநாடு செல்கிறார் என குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார் ? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என பார்ப்பேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது என்ற பாக்யராஜ், “நான் கர்நாடகா சென்றிருந்த போது அண்ணாமலை பற்றி பெருமையாக பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது பாராட்டப்பட வேண்டியது, பாஜகவுக்கு சரியான ஆளைத்தான் தலைவராக போட்டிருக்கிறார்கள் எனவும் பாராட்டினார்.








