மத்திய அரசுத் துறைகளில் சேர தேர்வு செய்யப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார்.
மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் பத்து லட்சம் பேருக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, பல்வேறு கட்டங்களாக மத்திய அரசு பணிகளுக்கு நியமிக்கப்படுவோருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார். நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
மேலும் அஞ்சலக ஆய்வாளர்கள், தட்டச்சர், தீயணைப்ப ஊழியர், ஆடிட்டர், பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
- பி.ஜேம்ஸ் லிசா







