உண்மையான சமூகநீதியின் ஹீரோ பிரதமர் மோடி தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திராவிட மாடல் என்பது என்ன என்று திமுக விளக்க வேண்டும். 50, 60 ஆண்டுகளாக திராவிட மாடலில் தான் ஆட்சி நடக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் இன்றும் பல கோவில்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகவும், பல கிராமங்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய முடியாத சூழல் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், இது தான் திராவிட மாடலா? ஜாதிக்கொரு சுடுகாடு வைத்து கொள்வது தான் திராவிட மாடலா? உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் நரேந்திர மோடி தான் என தெரிவித்த அவர், எதை திராவிட மாடல் என்று திமுக கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது எனவும், 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது எனவும் கூறிய அவர், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்கவில்லை என்றும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை மத்திய அரசு உறுதிபடுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.
2014-க்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக உள்ளது. தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின் வெட்டு உள்ளது. பொருளாதாரத்தில் தமிழ்நாடு கீழ்நிலையில் சென்றுள்ளது. இந்த பொருளாதார சுமையை மக்கள் தலையில் தமிழ்நாடு அரசு சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழி போடுவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார் என குற்றம்சாட்டினார்.