பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஓமன் நாட்டிற்கு சென்றார். ஓமனின் மஸ்கட் நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு துணை பிரதமர் சயீத் ஷிஹாப் பின் தாருக் அல் சையத் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அப்போது பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மேள தாளங்கள் முழங்க, இசை கச்சேரி நடத்தியும், சிறுவர் சிறுமிகளின் பாரம்பரிய நடனமும் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இவ்விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி உள்ளார். ஓமன் அளித்த இந்த விருதுடன் சேர்த்து 29 வெளிநாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.