குடியரசுத்தலைவர் வருகை திரௌபதி முர்மு நாளை மதுரை வருகை தர உள்ளதால் விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது
இரண்டு நாட்கள் பயணமாக தமிழகத்திற்கு குடியரசுதலைவர் திரௌபதி முர்மு
வருகை தர உள்ளார். அதன்படி நாளை காலை 12 மணிக்கு மேல் டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு விமானம் மூலமாக வருகை தருகிறார். அதன் பின்னர் விமானநிலையத்தில் இருந்து காரில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி
தரிசனம் செய்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது
மீனாட்சியம்மன் கோவிலில் , விமான நிலையம் மற்றும் வில்லாபுரம் மேம்பாலம்,
விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரையிலான சாலைகளிலும் குடியரசு
தலைவருக்கான பாதுகாப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர். மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும், ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியரசுத் தலைவரின் வருகை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல்
மீனாட்சி அம்மன் கோவில் வரையிலும் மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து
மதுரை விமான நிலையம் வரைக்கும் பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையின் பொழுது குடியரசுத் தலைவர் வரும் வாகனம் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் பின்னர் பாதுகாப்பு வாகன அணிவகுப்பு போன்று ஒத்திகை நடத்தப்பட்டது
தொடர்ச்சியாக பாதுகாப்பு ஏற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்
அனீஸ்சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் முழுவதிலும் குடியரசு தலைவரின் வருகையை
முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
– யாழன்