சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்வைத்தியநாதனை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த டி.ராஜா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த 8 மாதங்களாக பதவி வகித்து வந்தார். அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கான பிரிவு உபசார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது.
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜாவை ஏற்கெனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அவரை இடமாறுதல் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கை மற்றும் அவரும் தனது இடமாறுதலை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் விடுத்த கோரிக்கை ஆகியவற்றை பரிசீலித்த மத்திய அரசு, தொடர்ந்து அவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்ற அனுமதித்தது.
இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியான டி.ராஜா பணி ஓய்வு பெறுவதால், புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதியான எஸ்.வைத்தியநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.







