இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று, கோத்தபய ராஜபட்ச அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவடைகிறது. இதனையொட்டி அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ளன. அதில் 196 பேர் தேர்தல் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். இலங்கையில் ஒட்டுமொத்தமாக 9 மாகாணங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன. ஆனால், தேர்தலுக்காக இவை, 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். இப்படிப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 160 தேர்தல் தொகுதிகள் இருக்கும். அதோடு ஒரு மாகாணத்துக்கு கூடுதலாக 4 உறுப்பினர் என்கிற வகையில் மொத்தமுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு 36 பேர் என ஒட்டுமொத்தமாக 196 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணிக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 113. ஆனால் கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் வாக்களிப்பின்றி அந்நாட்டு நாடாளுமன்றம் நேரடியாக அதிபரைத் தேர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.







