நாட்டின் 74-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக பிரதமர் மோடி, கடமையின் பாதையை ஒட்டி இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள கடமையின் பாதை விஜய் சவுக் குடியரசு தலைவர் மாளிகை சந்திப்பு பகுதிக்கு வருகை தந்தார்.
இதனை தொடர்ந்து கடமையின் பாதைக்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வின் போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. குடியரசு தலைவர் கொடி ஏற்றி கொடிவணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது. முப்படைகளின் அணிவகுப்பினை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதா அல்சிசி, குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.