சூரிய கிரகணத்தின்போது உணவு சாப்பிட்ட கர்ப்பிணிகள்

சென்னை பெரியார் திடலில் சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் என பலரும் சிற்றுண்டி சாப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கைகளை…

சென்னை பெரியார் திடலில் சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் என பலரும் சிற்றுண்டி சாப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி
தலைமையில் நடைபெற்றது. மேலும் இன்று சூரிய கிரகணம் தொடங்கிய தருணத்தில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவருமே சிற்றுண்டி சாப்பிட்டு மூடநம்பிக்கையை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கி.வீரமணி, ”மனிதர்கள் கிரகணத்தை பார்த்து பயந்தது முக்கியமல்ல. கடவுளையும் சேர்த்து பயப்பட வைத்து விட்டனர். இன்று பல கோயில்கள் மூடப்பட்டு இருக்கின்றன. அறிவியல் அறிவிலாக பார்க்க வேண்டும். இவர்கள் மேடையில் பேசுவார்கள், ஆனால் இதை நடத்துவார்களா என்று கேட்டார்கள். அதற்கு மாறாக சாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சாதிவெறி ஒன்றே மனிதனை மிருகமாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது.

மக்களின் நல்வாழ்விற்காகவே இது போன்ற பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். மூடநம்பிக்கை என்பது தன்னம்பிக்கைக்கு எதிரானது. விழாக்கள் என்பது மூடநம்பிக்கைக்கு எதிராக இருக்க வேண்டும். காற்றின் மாசு கட்டுப்பாட்டை கருதி நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவை குறைத்து இருந்தது. ஆனால் நாட்டில் பிஜேபி தலைவர்கள் பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர். பலருக்கும் காற்றின் மாசுபாட்டால் மூச்சு திணறல் ஏற்படுகிறது” என்றார்.


நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ இன்று 5 மணி முதல் 6 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது என்றும், கர்ப்பிணி பெண்கள் வெளியில் நடமாடக்கூடாது என்றும் சொல்வது பொய்யான பரப்புரை ஆகும். பெயரளவில் மட்டும் ஜி என்று பேசிக் கொள்கிறோம். ஆனால் விஞ்ஞான அளவில் 5ஜி அளவிற்கு நாம் வளரவில்லை. இந்த மூடநம்பிக்கைகளை முறியடிக்க பேச்சினால் மட்டுமல்ல, நடைமுறைப்படுத்தியும் வருகிறோம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பதி, குழந்தையுடன் நலமாக இன்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளனர். மூடநம்பிக்கையால் தன்னம்பிக்கை கெடுகிறது. அதனால் மக்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. மனோ தத்துவ ரீதியாக பெண்களுக்கு துணிச்சலை கொடுக்கக்கூடிய நிகழ்ச்சியாக இதை நடத்தியுள்ளோம்.


அறிவியல் மனப்பான்மையை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளவர்களுக்கு தான் கற்றுத் தர வேண்டும். ராக்கெட் விடும் பொழுதும், விட்டபிறகும் திருப்பதி ஏழுமலையானை சந்திக்கிறார்கள். அந்த ராக்கெட் ஏன் தோல்வி பெற்றது என்று அவர்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்வார்களா?. தமிழக பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகுத்தறிவு இருக்க வேன்டும். பகுத்தறிவு இல்லாத பாடத்திட்டம் எதற்கு” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.