இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட், டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 2) தொடங்க இருக்கிறது.
கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 78 ரன்னில் சுருண்டு அதிர்ச்சி அளித்தது. இங்கிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
ரவீந்திர ஜடேஜா காயமடைந்துள்ளதால, கடந்த மூன்று போட்டிகளில் ஆடாமல் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. இதே போல் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா களம் காண வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும்போது, ‘ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், அஸ்வின் சிறப்பாக செயல்படுவார். இருந்தாலும் ஆடுகளத்தை பொறுத்தே அஸ்வினை ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் இருப்பதால் இன்றைய போட்டியில் வெல்ல, இரு அணிகளுமே தீவிரம் காட்டும் என்பதி சந்தேகம் இல்லை.