புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 5வது நாளான நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் இறுதியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகை 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனக் கூறினார்.
பயிற்சி மருந்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் ரங்கசாமி, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற அனைத்து கல்வி கடன்களும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார்.




