10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதனுடன் பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம்பிடித்துள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பிப்.7-ம் தேதி அமெரிக்காவுடன் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது.
தொடர்ந்து 12ம் தேதி நமீபியாவுடன் டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18ம் தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது.
இந்த நிலையில், இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று (டிச.20) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.







