உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா…இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம்!

இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில், விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடத்தை பிடித்துள்ளார்.  தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா,  கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதோடு,  தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.  கடந்த 2023-ம் ஆண்டில்,…

இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில், விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். 

தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா,  கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதோடு,  தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.  கடந்த 2023-ம் ஆண்டில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய உலகின் இளம் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார்.  மேலும் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிப் போட்டியை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.  அதேபோல், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடைபெற்றுவருகிறது.  இதில் நேற்று (ஜன.17) இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார்.  இப்போட்டியில் 62 நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரனை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில்,  விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.  ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 2,748 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 2.748.3 புள்ளிகளுடனும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:  குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

நடைபெற்று வரும் நெதர்லாந்து போட்டியில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.  நாளை (ஜன.18) நடைபெறும் ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார்.   இவர் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.