மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மெக்சிகன்பசிபிக் கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:05 மணிக்கு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறிஅடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அகுலியா நகரத்தில் இருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கடல் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் அப்பகுதியில் விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகன் பசிபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலோர பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.







