டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்தார்.
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். டெல்லி நார்த் ப்ளாக்கில் உள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
மத்திய உள்துறை அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிச்சாமி சுமார் 15 நிமிடங்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். கோதாவரி – காவிரி நதி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை வைத்தோம்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது. போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு போதை பொருட்கள் தடை இன்றி கிடைக்கின்றது. அதனை மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஏற்கனவே இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை. கொரொனா காரணமாக பொருளாதாரத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அமித்ஷாவுடனான சந்திப்பின் போது அரசியல் சம்பத்தமாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.







