30.8 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

விவேக் சாலை: சாத்தியமானது எப்படி? – மனம் திறந்த பூச்சிமுருகன்

சின்னக் கலைவாணர் விவேக் சாலை சாத்தியமானது எப்படி என்பது குறித்து, திமுக பிரமுகரும், நடிகருமான பூச்சிமுருகன் மனம் திறந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர் விவேக். சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டு வந்த விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் வாழ்ந்த தெருவுக்கு, அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் வைத்து முதல்வர் மு.கா.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, திமுக பிரமுகரும், நடிகருமான பூச்சி முருகன் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், இதுவரை எனது வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்ப சூழ்நிலைகளை கடந்திருக்கிறேன். ஆனால், இது இதுவரை சந்தித்திராத ஒன்று. 80களின் இறுதியில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டியிருந்த சமயம் அது. விவேக் அவர்கள் அப்போது தான் அறிமுகமானார். நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் எனக்கு மிகச் சிறிய வேடம் தான். ஆனால் விவேக்குடன் வந்த அந்த காட்சி எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

விவேக்குடன் பின்னர் பெரிதாக பேசியது இல்லை. ஆனால் கொரோனாவுக்கு முந்தைய சில மாதங்களில் பேசத் தொடங்கினார். கொரோனா காலகட்டத்தில் ரொம்பவே நெருங்கிப்போனோம். காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை அழைப்பு வந்துவிடும். பேசுவோம். அந்த வானத்தின் கீழ் இருக்கும் அனைத்தையும் பற்றி அவருடன் பேசலாம். போனை எடுத்ததும் ஒலிக்கும் அந்த பூச்சி சார் என்ற குரல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் மறுநாள் காலை அழைப்பதாக சொன்ன விவேக்கிடம் இருந்து அழைப்புக்கு பதிலாக அவரது மரண செய்தி தான் வந்தது. என்னால் இந்த நொடி கூட நம்ப முடியவில்லை. எங்கேயோ அவுட்டோர் ஷூட்டிங் சென்றிருக்கிறார். சென்னை திரும்பியதும் அழைப்பார் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த 16ஆம் தேதி விவேக்கின் உதவியாளர் செல் முருகன் அழைத்து ‘நாளை சாரின் முதலாமாண்டு நினைவு நாள். அவரது நினைவாக அவர் விட்டுச்சென்ற மரம் நடும் பணியை விவேக்’ஸ் கிரீன் கலாம்’ என தொடங்க இருக்கிறோம்’ என்று அழைப்பு விடுத்தார். செல் முருகனிடம் பேசித்தான் விவேக் இல்லாத குறையை தீர்த்துக்கொள்கிறேன்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம். விவேக்குக்கு நெருக்கமான மிகச்சில நண்பர்களே வந்திருந்தனர். விவேக்கின் நண்பர்களும் அவரது சக நடிகர்களும் அங்கே தான் அந்த கோரிக்கையை வைத்தனர்.

விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்று. பேசிக் கொண்டிருக்கும்போதே தகவல் வந்தது. தலைவர் அறிவாலயத்துக்கு வந்திருக்கிறார் என்று. அவசரம் அவசரமாக வந்து தலைவர் எதிரில் நின்றேன். கேட்காமலேயே சொன்னேன் நிகழ்ந்ததை. ’ஒரு வருஷம் ஆகிடுச்சா?’ என்றவர் முறையாக ஒரு கடிதம் கொடுக்க சொல்லுங்கள் என்றார். அடுத்த சில நாட்களில் செல் முருகனும், விவேக் குடும்பத்தினரும் முதல்வரை சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்தனர்.

சரியாக 15ஆவது நாள் இன்று. விவேக் வசித்த தெருவுக்கே அவர் பெயரை சூட்டி அரசாணையே வெளியாகிவிட்டது. அந்த அரசாணையில் எனது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் கலைஞனை கவுரவிக்க உடனடியாக ஆவன செய்த தமிழினத் தலைவருக்கு நன்றிகள்!

விவேக் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் என்று தெரியும். ஆத்ம நண்பனுக்கு கிடைத்த கவுரவம் என்று மகிழ்வதா அவர் இல்லையே என்று கலங்குவதா என்று தெரியவில்லை. எங்கிருந்தோ ‘தேங்ஸ் சி எம் சார்’ என்று சொல்வது மட்டும் கேட்டது. நீங்கள் எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள் விவேக் சார் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading