பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து மக்கள் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர் செல்ல ஏதுவாக வரும் 13,14ம் தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை புறப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







