பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பயன் பெறும் வகையில், சென்னை தாம்பரம்-நெல்லை இடையே கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு விரைவு ரயில் வரும் 14 ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 9.00 மணிக்கு இந்த ரயில் திருநெல்வேலியை சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு விரைவு ரயில் ஜனவரி 18 ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு இந்த ரயில் தாம்பரம் வருகிறது.
இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது.







