மாசுக் கட்டுப்பாட்டு நிதியை மற்ற பணிகளுக்கு பயன்படுத்திய முந்தைய அதிமுக அரசிற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது
2018ஆம் ஆண்டு முதல் 2020-21ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு இருமுறை தலா ரூ. 90 கோடி வீதம் சென்னை, பெருநகரப் பகுதிக்குள் மாசுக் கட்டுப்பாட்டுக்காக ஒன்றிய அரசு ரூ. 180 கோடி அளித்து வந்திருக்கிறது. இந்த நிதியை கடந்த அதிமுக அரசாங்கம் முழுக்க முழுக்க சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்காகவே பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பருவ நிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் நுரையீரல்கள் நோய்கள் ஆகியவற்றின் பின்னணியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் காற்று மாசுபாடு கட்டுப்பாட்டு தரத்தை சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் அடையவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த காரணத்தினால் குழந்தைகள், முதியோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் மருத்துவ கட்டமைப்புகள் மீது அழுத்தம் ஏற்படுவதோடு தனிநபர் மற்றும் குடும்பங்களின் மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கின்றன.
காற்றில் கலந்துள்ள நுண்துகள்களை கட்டுப்படுத்தவும், பசுங்கூட வாயுக்களை குறைக்கவும், சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் முந்தைய அதிமுக அரசு இந்நிதியை மாசுக் கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்தாமல் இதர பணிகளுக்கு பயன்படுத்தியது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. மக்களின் உடல்நிலை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை புறக்கணிக்கும் செயலாகும்.
எனவே, இந்த நிதியை நான்கு ஆண்டுகளாக முறையாகப் பயன்படுத்தாத அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவுறுத்தல் அளிப்பதோடு, எதிர்காலத்தில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காற்று மாசுத் தன்மையை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது.