குடிபோதையில் மகள்களை கொடூரமாக அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் வேலைக்குச் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது சிறுமி நதியா தீயிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து எப்போதும் மது போதையில் இருக்கும் கோவிந்தராஜ், தனது குடும்பத்தினருடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கோவிந்தராஜ் மனைவி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், இவருடைய மகள்கள் நந்தினி (16) , தீபா (9) ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மது போதையில் வீட்டிற்கு வந்த கோவிந்தராஜுடன் தினமும் ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் எனக் கேட்டு இரு மகள்களும் சண்டை போட்டுள்ளனர். இதனால் கோபமடைிந்த கோவிந்தராஜ், இரு மகள்களையும் கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இரு மகள்களும் உயிரிழந்தனர்.
அக்கம்பக்கத்தினர் கோவிந்தராஜை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மது போதையில் தனது இரு மகள்களையும் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








