மக்களவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி அடிப்படை வசதிகளின்றி இந்தியாவில் இன்றளவும் பல காவல்நிலையங்கள் இயங்குவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முதல் கூட்ட தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றம் தொடங்கிய உடனே லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசியதோடு, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் இந்த விவகாரம் தொடர் அமளிக்கு வழிவகுத்ததால் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கிபோது, ஆன்லைன் சூதாட்ட மசோதா, அதானி விவகாரம்,
ராகுல்காந்தி விவகாரம் குறித்து உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்திருந்தார்.
அதில், நாடு முழுவதும் 17,535 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றில் 63 காவல் நிலையங்களில் வாகன வசதியும், 628 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதியும், 285 காவல் நிலையங்களில் வயர்லெஸ் கருவி, கைப்பேசி வசதிகளும் இன்றளவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், நக்சல் தீவிரவாத அமைப்பினரின் வன்முறை தொடர்பான மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய்
அளித்த பதிலில் கடந்த 12 ஆண்டுகளில் நக்சல்களின் வன்முறை 77 சதவிகிதம் அளவிற்கு குறைந்துவிட்டதாகவும், மேலும் நக்சல் தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்பு 90 சதவிகிதம் அளவிற்கு குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா