திண்டிவனம் அருகே நகை கடையின் சுவற்றைத் துளையிட்டு கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் புதுச்சேரி லாஸ்பேட்டை முல்லை வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். 46 வயதான இவர், கடந்த 20 ஆண்டுகளாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு காந்தி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாக கட்டிடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நாள்தோறும் வருவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை கடை திறக்கப்படாததால், இரவு மர்ம நபர்கள் சிலர் நகைக்கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு, உள்ளே இருந்த பீரோவை உடைக்க முயற்சித்துள்ளனர்.
இந்த கொள்ளை முயற்சியில் அதிர்ஷ்டவசமாக நகைகள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சுனில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கடையின் சுவற்றை ஆயுதங்கள் மூலம் துளையிட்ட மர்ம நபர்கள், கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் கடைக்குள் இருந்த பீரோவை உடைக்க முயற்சி செய்தபோது, பீரோ வலிமையாக இருந்ததால் அதனை கொள்ளையர்களால் திறக்க முடியவில்லை என்றும், மேலும் கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் பீரோவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்திருப்பது பீரோவில் லேசாக துளை இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மூன்று நபர்களுக்கும் மேற்பட்டோர், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு முயற்சி செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், காவல்துறை தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பல கோடி மதிப்புள்ளான நகைகள் பீரோவில் இருந்ததும், கொள்ளையர்கள் முயற்சி தோல்வி அடைந்ததால் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படாமல் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டதுடன், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் போலீசார் கொள்ளை முயற்சி ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
சௌம்யா.மோ






