தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரியர், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில் சட்டம் என்ன சொல்கிறது என விளக்குகிறார் பிரபல வழக்கறிஞர் அஜிதா.
இது தொடர்பாக அவர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் கூறியிருப்பதாவது, “சமீபத்தில் தனியார்ப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல், வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி நாம் அனைவரும் அறிந்தோம். இந்த பிரச்சனைக்கு பிறகு சமூகம் முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்ன? அதனை எப்படி பார்ப்பது? பொதுவான பாலியல் குற்றங்களும், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களும் ஒன்றுதானா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குழந்தைகளுக்கான சட்டம் எது?
பாலியல் வன்முறை தொடர்பாக நாம் அடிப்படையாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் சட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று 18-வயதுக்குட்பட்ட சிறார், சிறுமியர் யாராக இருந்தாலும் அவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகிறார்கள்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளையும் துன்புறுத்தல்களையும் கையாள்வதற்கான போக்சோ (POCSO) சட்டம் நடைமுறையில் உள்ளது. போக்சோ என்றால் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம். இச்சட்டம் 2012-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
குழந்தைகளாக அல்லாமல் 18 வயதிற்கு மேல் உள்ள ஆண், பெண் குறிப்பாகப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அனைத்து இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) மூலமாகவும் பணியிடங்களில் பாலியல் வன்முறை நடந்தால் அது பணி தளங்களில் பாலியல் வன்முறைகள், பாதுகாத்தல், தடுத்தல் மற்றும் குறை தீர்த்தல் சட்டம் 2013-ம் மூலமாகவும் கையாளப்படுகிறது.
குற்றம் புரிந்தவர் குற்றவாளியே
குறிப்பாக குழந்தைகள் மீதான மிக கடுமையான பாலியல் வன்புணர்வு குற்றங்கள் அல்லது வன்புணர்வு அற்ற பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் இப்படி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று விதமான குற்றங்களில் எந்த குற்றத்தையும் புரிந்தால்கூட அது போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும்.
போக்சோ சட்டம் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்க இயற்றப்பட்ட சிறப்பு சட்டமாகும்.
இச்சட்டத்தின் மூலமாகக் குற்றச்சாட்டப்படும் நபர் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுச் செய்தாலே அவர் குற்றவாளி என சட்டம் சொல்கிறது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அல்லது மற்ற குற்றப்பிரிவு சட்டத்தின் கீழ் பாலியல் வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்படும் நபர் தன்னுடைய குற்றத்தை நிரூபிக்கும்வரை அவர் நிரபராதியாகவே கருதப்படுகிறார்.
எனவே குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தைப் புரிந்தால் அதை கடுமையான குற்றமாக சட்டம் எடுத்துக்கொள்கிறது. இந்த குற்றத்தைப் புரிந்தவரைக் குற்றவாளியாகவே பார்க்கப்படுகிறார்.
ஒரு சாட்சியம் போதும்
பாதிக்கப்படும் குழந்தை சொல்லும் ஒரு சாட்சியத்தைவைத்து மட்டும் அவரை குற்றவாளியாக என்று நிரூபிக்கமுடியும்.
இந்த போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்படும் வாக்குமூலம் நீதிபதியின் முன்புதான் பதிவுச் செய்யப்படும். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்கவே சிறப்பு சிறார் நீதிமன்றம், சிறப்பு காவல் அதிகாரிகள் மாவட்ட வாரியாக உள்ளனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் குற்றங்கள் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நட்பு ரீதியாகவும் குற்றவாளிக்கு எதிராக கடுமையாக இயற்றப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுடன் இருக்கும் பெற்றோர், பாதுகாவலர் மற்றும் உறவினர்கள் இந்த குற்றத்தை மூடி மறைக்காமல் இது அவமானத்தை ஏற்படுத்தும் என கருதாமல், அப்படி இது அவமானத்தை ஏற்படுத்தும் என கருதினால் அது தவறு செய்தவர்களுக்குத்தான் என கருதவேண்டுமே தவிர நம் குழந்தைகளுக்கு அல்ல என நினைக்கவேண்டும்.
இந்த கட்டுரையை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யுங்கள்