பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட 5 பேர் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில் வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 5-ம் தேதி பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் வான் வழியாக அவர் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென சாலை மார்கமாக பயணிக்க திட்டமிடப்பட்டது. பெரோஸ்பூர் மாவட்டத்திற்கு மோடி சாலை வழியாக காரில் சென்றபோது, விவசாயிகள் மறியல் போராட்டத்தால், அவரது பயணம் தடைப்பட்டது. 20 நிமிடங்கள் வரை மேம்பாலத்திலேயே அவர் காத்திருக்க நேரிட்டது. இதனால், பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, “பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் குறித்த அனைத்து விசாரணைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மல்ஹோத்ரா தலைமையில், 5 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதையடுத்து, விசாரணையை தொடங்கியுள்ள இந்த குழு, நேற்று பெரோஸ்பூருக்கு சென்றது. பிரதமரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட பகுதி, அவர் காத்திருந்த மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அந்த குழு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டது.