நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு 5வது முறையாக இன்று நேபாளம் செல்கிறார்.
புத்தர் பிறந்த லும்பினி நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள மாயாதேவி ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ள இருக்கிறார்.
இதையடுத்து, நேபாள அரசின் ஆதரவுடன் இயங்கும் லும்பினி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள புத்த ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.
லும்பினியில் உள்ள, சர்வதேச புத்த கூட்டமைப்புக்குச் சொந்தமான நிலத்தில், புத்த கலாச்சார மையம் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார்.
இதையடுத்து, நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபாவை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஹெர் பஹதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் நேபாளம் செல்ல இருப்பதாகவும், புத்த ஜெயந்தி தினமான இன்று லும்பினியில் உள்ள மாயாவதி ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட இருப்பதை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
புத்தர் பிறந்த புனித தலத்தில் மரியாதை செலுத்துவதற்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் பெருமைகொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், நேபாள பிரதமர் தியூபாவுடனான சந்திப்பை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








