நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள 300 அடி ஆழ கல்குவாரியில் நள்ளிரவில் பாறை உருண்டு விபத்துக்குள்ளானது. இதில், குவாரியில் பணிபுரிந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மீட்புப்பணி துரிதப்படுத்தப்பட்டது. 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், குவாரியில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே, விபத்துக்குள்ளான கல்குவாரியை மூட வலியுறுத்தி பொன்னாகுடி பகுதியில் உள்ள நெல்லை – குமரி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், குவாரியில் சிக்கி இருப்பவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
கல்குவாரியில் மேலும் சில பாறைகள் சரிந்து விழுந்ததால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து குவாரியின் ஆழமாக பகுதியில் இருந்த மீட்புப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மீட்புப் பணிகள் சிறிதுநேரம் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனிடையே, கல்குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்து துரிதப்படுத்த, அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டவர்களை அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், கல்குவாரியில் சிக்கி இருந்த செல்வன் என்பவர் கை அசைத்து சைகை மூலம் தன்னை அடையாளம் காட்டிய நிலையில் அவர் மீட்கப்பட்டார். 17 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செல்வன் உயிரிழந்தார்.
இதற்கிடையே, முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் ராஜகண்ணப்பன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது கார்களை முற்றுகையிட்ட பொதுமக்கள், விபத்து காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். குவாரியில் பாறை சரிவுகளுக்கிடையே சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
அண்மைச் செய்தி: ‘’விக்ரம்’ ட்ரெய்லர்: உக்கிரமான தோற்றத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி’
இந்நிலையில், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 304, 304-A, 336 என மூன்று பிரிவுகளின் கீழ், குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன், குவாரி ஒப்பந்ததாரர் செல்வராஜ், அவரது மகன் குமார் மற்றும் மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, குவாரியில் சிக்கி இருக்கும் லாரி ஓட்டுனர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய 3 பேரை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.