ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியுடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கெனவே விவாதித்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பா.பென்ஜமின் ஆகியோர் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பின்போது இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து திமுக-காங்கிரஸ் கூட்டணியும் தனது முடிவை இறுதி செய்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என நேற்று அறிவித்தது.இந்த நிலையில் அதிமுக -தாமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என்று ஜி கே வாசன் அறிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரான கே வி ராமலிங்கம் 2011, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக சிறிதுகாலம் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.