நடிகர் விஷாலின் டிவிட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ள டிவீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ள, காசி விஸ்வநாதர் கோவில் அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ.800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்து காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். அதற்கு பிறகு இரவு நேரத்திலும் காசி நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மக்களிடமும், கடை வியாபாரிகளிடமும் பேசினார்.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி சுவாமி தரிசனம் செய்யும் விதமாக, நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் பாதை வரை சுமார் 320 கிலோமீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/narendramodi/status/1587805666848440320
இதனால் எவ்வித கூட்ட நெரிசலும் இன்றி, பக்தர்கள் நடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டது. அதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆன்மீக அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு மையங்கள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தனது நண்பர்களுடன் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, சென்ற நடிகர் விஷால் பார்த்து வியந்தது மட்டுமின்றி, காசி விஸ்வநாதர் கோவிலை புனரமைக்க உத்தரவிட்டு, ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடியை புகழ்ந்தார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், “அன்புள்ள பிரதமர் மோடி ஜி, நான் காசிக்கு சென்று அற்புதமான தரிசனம் செய்தேன். கங்கா நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாக மாற்றி உள்ளீர்கள். எவரும் தரிசிக்க கூடிய வகையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என தெரிவித்திருந்தார்.
நடிகர் விஷாலின் இந்த டிவிட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதில் டிவீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் டிவிட்டுக்கு பிரதமர் மோடி பதிலளித்த நிகழ்வு இணையதளத்தில் வைரலலாகி வருகிறது.







