ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களிடம் காணொலி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, நாடு உங்களுக்கு துணை நிற்கிறது எனக் கூறி உற்சாகமூட்டினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதில், இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீர்ர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள உங்களுக்காக நாடு முழுவதும் மக்கள் மிகவும் எழுச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகக் கூறினார். வீரர்களிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு , குறிக்கோள், அனைத்தும் உள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, உங்களின் நற்பண்புகள் புதிய இந்தியாவிற்கு வழிகாட்டும் எனத் தெரிவித்தார்.
பலவிதமான வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையோடு நாடு உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது எனக் கூறிய பிரதமர் மோடி, முழு மனதுடன் சிறப்பாக விளையாடுங்கள், நாடு உங்களுக்கு துணை நிற்கிறது எனக் கூறி உற்சாகமூட்டினார்.









