வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வெழுதிவிட்டு காத்திருந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுதேர்வுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் புதுடெல்லியில் இன்று நீட்மறுதேர்வு தொடர்பாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், கல்வி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தேர்வு மையங்களின் பாதுகாப்பு, வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பக் கண்காணிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். தொழில்நுட்பக் கோளாறுகளோ அல்லது மனிதத் தவறுகளோ இல்லாத வகையில், தேர்வுக்கான ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் 100% பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்வு மையங்களுக்குள் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுவது முதல், விடைத்தாள்கள் சேகரிக்கப்படுவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் மிகக் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தேர்வு மையங்கள் அனைத்தும் AI தொழில்நுட்பம் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் முறைகேடுகளில் ஈடுபட முயலும் நபர்கள் மீது உடனடியாகக் கடுமையான கிரிமினல் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.
தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்குத் தேர்வு மையங்களில் எவ்வித தேவையற்ற அலைச்சலோ, மன உளைச்சலோ ஏற்படாதவாறு நிர்வாக நடைமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியுள்ளார்.







