சென்னையில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தன. இந்த போட்டிகள் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா களமிறக்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்காக ஜூன் 19-ந்தேதியன்று டெல்லியில் இந்திராகாந்தி தேசிய விளையாட்டரங்கில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைமையகத்தை நோக்கி செல்வதற்கு முன்பு இந்த ஜோதி இந்தியாவில் சுமார் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு 75 முக்கியமான இடங்கள் வழியாக பயணம் செய்து நேற்று முன்தினம் சென்னை வந்து சேர்ந்தது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு, விழா நடைபெறும் உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்தார்.
பின்னர் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் சதுரங்க கரை வேட்டி மற்றும் சட்டையில் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
-இரா.நம்பிராஜன்