44வது சர்வதேச சதுரங்கப் போட்டியின் கண்கவர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
44வது சர்வதேச சதுரங்கப் போட்டி இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
அதற்கு முன்பாக, நேரு உள் விளையாட்டு அரங்கில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் அர்கடி துவார்கோவிச் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கருப்பொருளாகக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஏ.ஆர். ரகுமானின் வந்தே மாதரம் பாடல் இசைக்குழுவினரால் இசைக்கப்பட்டது.
இதையடுத்து, குச்சுப்புடி, ஒடிசி, கதகளி, மோகினி ஆட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
டிஜிட்டல் மேடை அமைக்கப்பட்டிருந்ததால், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்றார்போல் அரங்கம் பல்வேறு வண்ணங்களால் காட்சியளித்தது.
இதையடுத்து, திரையில் நேரடியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஓவியங்கள் வரையப்பட்டன.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் காண்போர் கண்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இந்து பத்திரிகையின் என். ராம், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு பிரபலங்கள் பங்கேற்றனர்.










