முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது தவறு என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரி எனக்கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி துறையில் காலியாக உள்ள 356 முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொது பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்த மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் நியமிக்கும் வகையில் வெளியிடபட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி சோபனா, சித்ரா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வு பட்டியலை மறுபரிசீலனை செய்து, புதிய தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் பின்னடைவு காலி பணியிடங்களை முதலில் நிரப்ப வேண்டும் என்றும், அதன்பின் தற்போதைய காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.
அதில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில்,
அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொது பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்த மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் சேர்த்தது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியே எனக் கூறி தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.