அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பரிசோதனையை தொடங்கி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் மருந்து நிறுவனம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசி தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 12-18 வயது சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கப்படுவதைப் போலவே, இந்த வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் 30 மைக்ரோகிராம் அளவில் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபைசர் நிறுவனம் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனையைத் தொடங்கியிருக்கிறது. இதில் அமெரிக்கா, ஃபின்லாந்து, போலந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 4,500 சிறுவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 5 முதல் 11 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் 10 மைக்ரோகிராம் அளவும் மற்றும் 6 மாதம் குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகளுக்கு 3 மைக்ரோகிராம் அளவும் பரிசோதனையில் செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 12 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடத்தப்படும் பரிசோதனை முடிவுகள் வரும் செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் சுமார் 70 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, இந்தியாவிலேயே ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை தயாரித்து செலுத்துவது குறித்து மத்திய அரசு அந்நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.







