72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.
பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைந்து விற்பனையாகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை உயர்த்தியபோது, மத்திய அரசு ஒருபோதும் எந்த மாநிலங்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், மாநிலங்கள் தங்கள் வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பெட்ரோல் விலையை 14 ரூபாய், டீசல் விலையை 17 ரூபாய் குறைத்துள்ளது. இதனால்1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக சொல்லி இருந்ததாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “72 மணி நேரத்தில் சொன்னதை செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை இந்த அரசு செய்ய வேண்டும். இல்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்” என்று கெடு விதித்துள்ளார்.
மேலும், “பேரறிவாளன் சட்டத்தில் உள்ள ஒரு 142 சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி வெளியில் வந்துள்ளார். அவர் அவருடைய வாழ்க்கையை வாழட்டும். ஆனால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் கிடையாது என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.