தோடர் பழங்குடி மக்களின் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

நீலகிரி மாவட்டம், பகல்கோடுமந்து பகுதிக்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய உடையான பூத்துகுல்லியை வழங்கி தோடர் பழங்குடி மக்கள் வரவேற்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு கடந்த 19ஆம்…

நீலகிரி மாவட்டம், பகல்கோடுமந்து பகுதிக்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய உடையான பூத்துகுல்லியை வழங்கி தோடர் பழங்குடி மக்கள் வரவேற்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக நீலகிரி மாவட்டம்,
உதகைக்கு கடந்த 19ஆம் தேதி வருகை புரிந்தார். 20ஆம் தேதி 124வது மலர்
கண்காட்சியை துவக்கிவைத்து குன்னூர் ராணுவப் பயிற்சி கல்லூரியில் ராணுவ
வீரர்கள் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து நேற்றைய தினம் 118 கோடியில் நீலகிரியில் நடந்து முடிந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, இன்று உதகை அருகே உள்ள பகல்கோடு மந்து என்னும் பகுதியில்
பழங்குடியின தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை பார்வையிட்டார். தோடர் பழங்குடியினர் கிராமத்துக்கு வந்த முதல்வர் மு.கஸ்டாலினுக்கு பாரம்பரிய உடையான பூத்துகுல்லி போர்வை வழங்கி சிறப்பான வரவேற்பளித்தனர். பின்னர், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம்
மற்றும் முந்தைய காலககட்டத்திற்கும், தற்போது உள்ள உள்ள கால கட்டத்திற்கும்
உள்ள வேறுபாடுகள் முதலானவற்றை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுடன்
கலந்துரையாடினார். பின்னர், கிராமத்தில் உள்ள தோடர் பழங்குடியின மக்களின்
கோயிலுக்குச் சென்று பார்வையிட்டார்.

பின்பு, அங்குள்ள தோடர் எருமைகள் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தை
பார்வையிட்டார். தொடர்ந்து,  தோடர் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் இசை
வாத்தியங்கள் குறித்து கேட்டறிந்தார். தோடர் இன மக்கள் முதல்வரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில், நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் இதுவரை மண் சாலைகள் மட்டுமே இருந்து வருகின்றன.  அதை தார் சாலைகளாக அமைக்க வேண்டும். வனப் பகுதியில் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை மேய்க்க வனத் துறையினர் அனுமதிப்பதில்லை. அதை நீக்க வேண்டும். மேலும், ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சும் கற்பூர சோலை மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.