பணபட்டுவாடா, பரிசுப் பொருள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக கூறி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், சுயேட்சை வேட்பாளர் கண்ணன் தாக்கல் செய்த மனுவில், “ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் நாம் தமிழர் கட்சியின் சட்டத்துறை செயலாளர் சேவியர் பெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்கள் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கட்சியின் பிரச்சாரத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். போதுமான அளவு மத்திய படை பாதுகாப்பு, சிசிடிவி கேமரா, வெப்காஸ்டிங் வசதி ஆகியவற்றை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “பணப் பட்டுவாடவை தடுக்க கண்காணிப்பு குழுக்களும் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உயர்நீதிமன்றம் தேர்தலை நியாயமாக நடத்துவது குறித்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
மேலும், ”தொகுதியில் 163 கொட்டகைகள் கண்டறியப்பட்டன. அதில் 107 கொட்டகைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளன. 42 கொட்டகைகளை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்றிவிட்டனர். எஞ்சிய கொட்டகைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: “பல வகையான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணப் பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.