டெல்லியில் தண்டவாளம் அருகே குறும்படம் எடுத்த இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள காந்தி நகர் மேம்பாலம் அருகே இரண்டு இளைஞர்கள் மொபைல் போனில் குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில் பாதையில் அவர்களது மொபைல்களும் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில், அவர்கள் வன்ஷ் ஷர்மா(23), மோனு(20) என தெரிய வந்தது.
இருவரும் டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் என்பதும், மொபைலில் குறும்படங்களை படம்பிடிப்பதற்காக தண்டவாளத்திற்கு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








